தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை முதல் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள குருப் 4 (இளநிலை உதவியாளர்/தட்டச்சர்/ சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (18ம் தேதி) காலை 10.30 மணிக்கு துவங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி நேரடியாக திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 முதல்மாலை 5.30 வரை நடக்கிறது. இதில் கலந்துகொள்ள விரும்புவோர், தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு (நகல்) ஆகியவற்றுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 044-27426020 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில், இப்பயிற்சி வகுப்புகளில் குருப் 4 தேர்வு எழுத தயாராகி வரும் வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: