லிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சில் டெல்லி கேப்பிடல்ஸ் திணறல்: மார்ஷ் அரை சதம்

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லிவிங்ஸ்டனின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி கேப்பிடல்ஸ் திணறியது. மிட்செல் மார்ஷ் அதிரடியாக அரை சதம் அடித்தார். டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசியது. டேவிட் வார்னர், சர்பராஸ் கான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். லிவிங்ஸ்டன் வீசிய முதல் பந்திலேயே வார்னர் டக் அவுட்டாகி வெளியேற, டெல்லிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து சர்பராஸ் கானுடன் மிட்செல் மார்ஷ் இணைந்தார்.

அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. சர்பராஸ் 32 ரன் (16 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ராகுல் சாஹர் வசம் பிடிபட்டார். அடுத்து மார்ஷ் - லலித் யாதவ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தது. லலித் 24 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் பந்துவீச்சில் ராஜபக்சவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ரிஷப் பன்ட் 7 ரன், ரோவ்மன் பாவெல் 2 ரன் எடுத்து லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, டெல்லி 112 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய மிட்செல் மார்ஷ் அரை சதம் அடித்தார். அவர் 63 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரபாடா வேகத்தில் ரிஷி தவானிடம் பிடிபட்டார். ஷர்துல் தாகூர் 3 ரன்னில் வெளியேறினார். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. அக்சர் படேல் 17 ரன், குல்தீப் யாதவ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் லிவிங்ஸ்டன் 4 ஓவரில் 27 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 37 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட், ரபாடா 1 விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது.

Related Stories: