புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் இந்த மாதம் முதல் வாரத்தில் பிரெஞ்ச் துறை சார்பில் இறுதியாண்டு மாணவிகளுக்கு பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. இவ்விழாவுக்கு ஆங்கில துறையை சேர்ந்த மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது, பிரெஞ்ச் துறை மாணவிகள் அவர்களை வழிமறித்து, மற்ற துறை மாணவிகள் விழாவுக்கு வர அனுமதியில்லை என கூறியுள்ளனர். இதனால் கோபத்துடன் அவர்கள் திரும்பி சென்றனர். தொடர்ந்து, கடந்த 11ம் தேதி ஆங்கிலத்துறை சார்பில் பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்விழாவுக்கு பிரெஞ்ச் துறையை தவிர்த்து அனைத்து துறை மாணவிகளும் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். அதன்படி விழாவும் நடைபெற்றுள்ளது. அப்போது, பிரெஞ்ச் துறையை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் வந்துள்ளார். அவரை எப்படி வரலாம் என ஆங்கிலத்துறை மாணவிகள் கேள்வி எழுப்பி திட்டியுள்ளனர். பதிலுக்கு பிரெஞ்ச் துறை மாணவியும் தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளனர்.