காலியாக உள்ள உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் வட்டார கல்வி அலுவலர் நியமனம்: 3 சதவீத ஒதுக்கீட்டில் விவரம் சேகரிப்பு

சேலம்: தமிழகத்தில் காலியாக உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 3 சதவீத ஒதுக்கீட்டில் பிஇஓக்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விவரம் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அரசுப் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக தலைமை ஆசிரியர் பணியிடங்களில், 3 சதவீதம் வட்டார கல்வி அலுவலர்களை கொண்டு நிரப்பிட வேண்டும். தற்போது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, மாநிலம் முழுவதும் தகுதிவாய்ந்த வட்டார கல்வி அலுவலர்களின் விவரம் சேகரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் காலியாக உள்ள 700க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் மூலம் நியமனம் நடக்கிறது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் 3 சதவீத இடங்களுக்கு வட்டார கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பதால், கடந்த ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, தகுதிவாய்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் பட்டியலை பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 31.12.2006க்கு முன்னர் பணியில் சேர்ந்த வட்டார கல்வி அலுவலர்களின் விவரங்களை உரிய படிவங்களில் பூர்த்தி செய்து, வரும் 20ம் தேதிக்குள் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது,’’என்றனர்.

Related Stories: