காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரச்னையில் தலையிட அரசுக்கு அதிகாரம் உள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் போது வடகலை பிரிவினர் வேத பாராயணம் செய்ய அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மே 14ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தலையிட அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு அறநிலையத்துறை உதவி ஆணையர் மே 14ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், கோயில் வேதபாராயணம் 30 பேரும், திவ்யபிரபந்த கோஷ்டியில் உரிமை பெற்றவர்கள் 10 பேரும், சாதாரண வழிபாட்டாளர்கள் 10 பேரும் கலந்துகொள்ள வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வடகலை பிரிவினர் திவ்யபிரபந்த கோஷ்டிகளில் முதல் 2 வரிசைகளில் வரக்கூடாது. தேசிக பிரபந்தம் பாடக்கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் தடைவிதிக்கக்கோரியும் நாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், வடகலை தென்கலை பிரிவினருக்கிடையேயான வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் கோயிலில் அனுமதி அளித்துள்ளது சட்டவிரோதம் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த விவகாரத்தில் தினசரி பிரச்னை ஏற்படுவதாலும், சாதாரண பக்தர்கள் முறையாக தரிசிக்க முடியாததாலும், அதை ஒழுங்குபடுத்துவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அப்போது நீதிபதி, பிரச்னை வராமல் ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், தென்கலை பிரிவினருக்கு மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்தது பாரபட்சமானது. எனவே, அறநிலையத்துறை உத்தரவு பிறப்பிக்கும் முன்பு இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை (இன்று) தள்ளிவைத்தார்.

Related Stories: