நூல் விலையை குறைக்க நடவடிக்கை பஞ்சு பதுக்கலே நூல் விலை உயர்வுக்கு காரணம்? ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 2020-21ம் நிதியாண்டு தொடக்கத்தில் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பஞ்சு தற்போது ஒரு லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 162 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. மேலும், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட இருக்கிறது என்பதும், இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான 11 சதவீத வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்பதும் சொல்லப்பட்டன.

இந்நிலையில், பஞ்சுக்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு அண்மையில் நீக்கியது. இதனைத் தொடர்ந்து பஞ்சு விலை குறையும் என்று அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் எதிர்பார்த்தனர். உற்பத்தியாளர்கள் தொடர்ந்து இழப்பினை சந்தித்து வருவதாகவும், எனவே நூல் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இன்று மற்றும் நாளை வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு வரியை குறைத்தும், நூலின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பது வியப்பாக உள்ளது. வாணிகம் என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சினை பதுக்கி வைத்து, பற்றாக்குறை ஏற்படுத்தி, விலை ஏற்றத்திற்கு யாராவது காரணமாக இருக்கிறார்களா என்பதையும், விலை உயர்விற்கு என்ன காரணம் என்பதையும் கண்டறிய வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசிற்கு இருக்கிறது.

Related Stories: