படியில் பயணம் செய்ததை தட்டிக்கேட்டதால் மாணவர்கள் ஆவேசம்: அரசுப்பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் சாலைமறியல்

சென்னை: நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் பேருந்து ஓட்டுநர், நடத்துனருடன் மோதலில் ஈடுபட்டனர். பிராட்வேயிலிருந்து அஸ்தினாபுரம் செல்லும் 52B என்ற பேருந்தானது, சைதாப்பேட்டை சின்னமலையை  கடந்து சிக்னலில் நின்றுகொண்டிருந்தது. அப்போது, 20-க்கும் மேற்பட்ட நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிவந்துள்ளனர். அவர்களை கண்டித்து, உள்ளே வரும்படி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவர்களுக்கும், ஓட்டுநர்- நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் வாக்குவாதமானது முற்றி, மாணவர்கள் ஓட்டுநர்,நடத்துனரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பேருந்தை சாலையில் நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியே வந்த அனைத்து மாநகர பேருந்தும் நிறுத்தப்பட்டது. அரசு பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் சேர்ந்து, இதுபோன்று பேருந்துகளின் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டித்து, அவர்கள் தாக்கியது தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்வரை பேருந்துகளை  இயக்கமாட்டோம் என்று, பேருந்தை சாலையில் ஆங்காங்கே நிறுத்தியதால், அரைமணி நேரம் பெரும் போக்குவரத்து பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக பேருந்தை நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தாக்கிய மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் அடிப்படையில் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் சில பேரை தற்போது போலீசார் சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.               

Related Stories: