மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் புதிய மதுபான கடை திறக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மணமேல்குடி பகுதியில் புதிய மதுபான கடை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று புதுக்கோட்டையைச் சேர்ந்த அம்பிகாபதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். புதிய மதுபான கடை திறக்க கூடாது என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள் புதுக்கோட்டை ஆட்சியர் 6 வாரத்துக்குள் பரிசீலனை செய்து முடிவு எடுக்க உத்தரவிட்டார். அதன்வரை புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, ஏழை, எளிய மக்களுக்கு பெரும் துயரமாக இருப்பது டாஸ்மாக் கடைகள்தான். அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் ஏராளமானோர் அன்றையதினம் வாங்கும் சம்பளத்தை, அன்றையதினம் மாலையிலேயே டாஸ்மாக் கடைக்குச் சென்று சரக்கடித்துவிட்டு அழித்து வருகின்றனர்.