நெல்லை மாவட்டத்தில் தூர்வாரப்படாத நீர்நிலைகள் அரியநாயகிபுரம் அணைக்கட்டில் உடைந்து கிடக்கும் மதகுகள்-தண்ணீர் திறப்புக்கு முன்னர் சீரமைக்கப்படுமா?

நெல்லை : நெல்லை அருகே அரியநாயகிபுரம் அணைக்கட்டில் பராமரிப்பின்றி உடைந்துகிடக்கும் மதகுகள் தண்ணீர்  திறப்பதற்கு முன்னதாக சீரமைக்கப்படுவதோடு ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த  ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிக அளவில் கொட்டித் தீர்த்தது. இதனால் பெருக்கெடுத்த தண்ணீரானது கோடை  காலமான தற்போது வரை பல்வேறு குளங்களில் ஓரளவுக்கு இருப்பு உள்ளது.

இதையொட்டி வழக்கத்தை விட அதிக அளவில் நெல் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள், வேளாண் பணிகளை முடுக்கிவிட்டனர். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான வடகிழக்கு  பருவமழை முன்னதாக நடப்பு வாரத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் நெல்லை, ெதன்காசி மாவட்டங்களில்  கார் பருவ சாகுடி விரைவில் துவங்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக கார் பருவ சாகுபடிக்காக அணைகளில் இருந்து  ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்படும்.

நடப்பு ஆண்டில் நீர் இருப்பை பொருத்து இது முடிவு செய்யப்படும். கார் பருவ சாகுடி நாட்கள் நெருங்கிவரும் நிலையில்  நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கால்வாய்கள், சிறிய அணைக்கட்டுகள் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் பராமரிப்பின்றி பாழாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன் கால்வாய்களில்  குப்பை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளும் அதிக அளவில் உள்ளன. போதை ஆசாமிகள் காலியாக வீசிசென்ற மதுபாட்டில்கள் அள்ளப்படாமல் குவிந்துக் கிடக்கின்றன.

 எனவே, இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களை  தூர்வாரும் பணியை உடனடியாக துவங்குவது மிகவும் அவசியமாகும்.  குறிப்பாக கடைமடை வரை தண்ணீர்  தடையின்றி செல்ல ஏதுவாக கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மேலும்  குளங்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளையும் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். இதே போல்  கால்வாய் மதகுகளில் உள்ள பழுதுகளை சீரமைப்பதும் அவசியமாகும். இதனிடையே நெல்லை அருகே அரியநாயகிபுரம் அணைக்கட்டில் பராமரிப்பின்றி 2 இடங்களில் உடைந்துக்கிடக்கும் மதகுகள், தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் உள்ளனர்.

Related Stories: