பெருந்துறை அருகே சென்டர் மீடியன் மீது வேன் மோதி விபத்து சென்னையை சேர்ந்த 15 பேர் படுகாயம்

ஈரோடு :  பெருந்துறை அருகே சென்டர் மீடியன் மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சென்னையை சேர்ந்த 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை ஆண்டவர் நகர் வெங்கடகிருஷ்ணன் (40). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 26 பேர் சுற்றுலா செல்ல ஒரு வேனில் புறப்பட்டனர். வேனை சென்னை பாடி கலைவாணர் நகர் வீதியை சேர்ந்த மோகன் தாமோதரன் (30) என்பவர் ஓட்டினார்.

நேற்று முன்தினம் இரவு ஊட்டி செல்ல திட்டமிட்டு, பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றனர். வேன் நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, வேன் டிரைவரின் கட்டுப்பாட்டினை இழந்து, சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் எதிர்பாராதவிதமாக மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில், வெங்கடகிருஷ்ணன்(40), அவரது மகள் சம்யுக்தா (5), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன்அஷ்வந்த் (25), வந்தவாசியை சேர்ந்த சாமியார் மகள் சுருதி (23), சரிகா (15), விக்னேஷ் (10), மோகனசுந்தரம் மனைவி சாந்தி (47), இவரது மகன் கவின்குமார் (29), சிவக்குமார் மனைவி கண்ணம்மாள் (45), துரைசாமி மனைவி ஆதிலட்சுமி (65), சென்னை எஸ்ஐ காலனியை சேர்ந்த ஆனந்த் மனைவி ஹேமலதா (39), அவரது மகள் சுமித்ரா (12), பார்த்தசாரதி மனைவி மணி (70), சங்கர் மகன் சித்தார்த் (6), முருகன் மனைவி சுமதி (45) என 4 சிறுவர், சிறுமிகள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை போலீசார் மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மீதமுள்ள 11 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, வேன் டிரைவர் தாமோதரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: