விதவையை ஆபாச படமெடுத்து திருமணம் செய்ய மிரட்டல்-வாலிபர் அதிரடி கைது

புதுச்சேரி : விதவையை ஆபாச படமெடுத்து திருமணம் செய்ய மிரட்டல்  விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி  வில்லியனூரைச் சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கு  கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான 10 மாதத்தில்  அவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் விதவையான இவர், அங்குள்ள ஒரு  துணிக்கடையில் வேலை செய்தார். அப்போது இந்த கடைக்கு அருகிலுள்ள காய்கறி  மொத்த விற்பனையகத்தில் பணியாற்றும் ஊழியரான வடமங்கலம் பூஞ்சோலை  குப்பத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் ஜெயக்குமார் (24) என்பவருடன் பழக்கம்  ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 ஜெயக்குமார் திருமண ஆசை காட்டிய நிலையில்,  நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் நெருங்கிப் பழகினார்களாம். அப்போது சில  புகைப்படங்களை ஜெயக்குமார் எடுத்து வைத்திருந்ததாக தெரிகிறது. பின்னர்  அவர்களுக்குள் பிரிவினை ஏற்படவே, ஜெயக்குமாருடன் பழக்கத்தை நிறுத்திய அந்த  இளம்பெண், திருப்பூர் சென்று அங்குள்ள ஒருதனியார் நிறுவனத்தில்  பணியாற்றியுள்ளார்.

 பின்னர் வேறு ஒரு நபரை திருமணம் செய்வதற்கான  ஏற்பாடுகளை இப்பெண் மேற்கொண்ட நிலையில் தகவல் கிடைத்ததும் மாஜி காதலனான  ஜெயக்குமார் அவரை செல்போனில் அவ்வப்போது தொடர்பு கொண்டு திருமணம் செய்து  கொள்ள வருமாறு அழைத்தாராம். அவர் தொடர்ந்து மறுக்கவே, விரக்தியடைந்த  ஜெயக்குமார், ஏற்கனவே அப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை  அனுப்பி வைத்ததோடு தனது விருப்பத்தை நிறைவேற்றாவிடில் இவற்றை பேஸ்புக்,  டிவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என  மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

 இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்  உடனே வில்லியனூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.  அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார்,  4 பிரிவுகளின்கீழ் ஜெயக்குமார் மீது வழக்குபதிந்து அவரை கைது  செய்தனர். பின்னர் அவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டுமத்திய  சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: