உலகெங்கும் தீபாவளி

நன்றி குங்குமம் தோழி

உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை பல விதமாக கொண்டாடி வருகிறார்கள். அது அவர்களின் பாரம்பரிய முறையாக இன்றும் கடைபிடித்து வருகிறார்கள்.

*வடமாநிலங்களில், தீபாவளி அன்று மகாலெட்சுமி தங்கள் வீடுகளில் தங்குவதாக ஐதீகம். தீபாவளி அன்று வரும் அமாவாசை தினத்தில் பூஜை அறையில் 24 மணி நேரமும் ஒரு விளக்கை எரிய விடுவது ஐதீகம். அந்த விளக்கில் இருந்து வெளியாகும், புகைக் கரியில் இருந்து கண் மை தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த கண்மையை தான் அவர்கள் ஆண்டு முழுதும் பயன்படுத்தி வருகிறார்கள். இதை ‘மோனி தீபாவளி’ என்று அழைக்கிறார்கள்.

*வங்காளத்தில் சும்பன் நிசும்பனை சம்ஹாரம் செய்த மகாதுர்க்கையின் உக்கிரத்தை சிவபெருமான் தணித்த நாளையே ‘தீபாவளி’ என்று வழிபடுகின்றனர்.

*பீகார் மாநிலத்தில் பழைய துடைப்பத்தை வீட்டு வாசலில் போட்டு தீயிட்டு எரிப்பது வழக்கம். இப்படிச் செய்வதால் வறுமை விலகி, நன்மை வந்து சேரும் என்பது நம்பிக்கை. ‘‘மூதேவியே போ… தேவியே வா’’ - என்று கோஷமிட்டு தீபாவளி திருநாளை வழிபடுவர்.

*குஜராத் மக்கள் தீபாவளி தினத்தன்று புதுவருடப்பிறப்பு என்றும், வியாபாரிகள் புதுக்கணக்கை இந்நாளில் துவங்குவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

 

*ஆண்டு தோறும் சிங்கப்பூரில் தீபாவளி அன்று மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீபாவளியைச் சிறப்பித்து தபால் தலை வெளியிட்ட நாடும் சிங்கப்பூர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

*மத்தியப்பிரதேசம், புதுடில்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் மகாலட்சுமி தனது கணவரான மகாவிஷ்ணுவுடன் பூலோகத்துக்கு வந்த நாள் என்பதால், அந்நாளை தீபாவளி நன்னாளாக கொண்டாடுகிறார்கள்.

- சு.இலக்குமணசுவாமி, திருநகர்.

வருங்காலத்தை கணிக்கும் தீபாவளி மாடுகள்

* ராஜஸ்தானில் தீபாவளிக்குப் பிறகு புத்தாண்டு பிறந்துவிடும். அங்கே ‘அகாவா’ என்ற கிராமத்தில் தீபாவளிக்குப்பின் வரும் ஆண்டை பலன் பார்க்கும் ஆண்டாகக் கணிப்பது பாரம்பரியம்.

*அன்று ஒரு கறுப்பு நிற மாடு - ஒரு வெள்ளை நிற மாடு, வெள்ளையும், கறுப்பும் கலந்த ஒரு மாடு என்று மூன்று  மாடுகளை தேர்வு செய்வார்கள். அவற்றை குளிப்பாட்டி அழகுபடுத்தி, கிராமத்தின் வெளிப்புறம் உள்ள மைதானத்தில் கொண்டுவந்து நிறுத்துவார்கள். பிறகு, அந்த மூன்று மாட்டையும் கிராமத்திற்குள் ஓட விடுவார்கள்.

*கிராமத்தை நோக்கி எந்த நிற மாடு முதலாவதாக ஓடுகிறதோ அதற்கு ஏற்ப அவர்கள் அந்த ஆண்டு பலனை கணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதாவது முதலாவதாக ஓடும் மாடு கறுப்பு நிறத்தில் இருந்தால், வரும் ஆண்டு மோசமாக இருக்கும். வெள்ளைநிற மாடாக இருந்தால் நன்றாக இருக்கும். வெள்ளையும், கறுப்பும் கலந்ததாக இருந்தால் நல்லதும், கெட்டதும் கலந்ததாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.

*‘தீபாவளித் திருநாளில்’ விளக்கேற்றி வழிபாட்டிற்குப்பின் இந்நிகழ்வை நடத்துவர். இன்றைக்கும் இது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: இல.வள்ளிமயில், மதுரை.

Related Stories: