நன்றி குங்குமம் தோழி
கிருஷ்ண பகவான் நரகாசுரனை அணுகி, தவம் செய்து பெற்ற வரத்தை தவறான வழியில் செயல்படுத்துவது நியாயம் அல்ல என்று முறையாக சொல்லி பார்த்தார். ஆனால் நரகாசுரன் கேட்பதாக இல்லை. தன் விருப்பம் போல் மக்களை கொடுமைப்படுத்தினான். இதனால் கோபம் அடைந்த கிருஷ்ண பகவான், நரகாசுரனை போருக்கு அழைத்து தம் சக்கராயுதத்தால் அவனின் உடலை இரண்டாக பிளந்தார்.இறக்கும் நிலையில் இருந்த நரகாசுரன், கிருஷ்ணனின் காலை பிடித்து, பகவானே என்னுடைய சாவு கெட்டவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். நான் செய்த பாவங்களை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினான்.
எனக்கு ஒரு ஆசை. அதை இப்போது தெரிவிக்கிறேன் என்று சொன்ன நரகாசுரன், கொடியவனாக நான் இறக்கும் இந்நாளை மக்கள் அனைவரும் அல்லல் நீங்கிய நன்னாளாக மங்களகரமான நாளாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று வேண்டினான். கிருஷ்ண பகவானும் அவ்வாறே அவனுக்கு அருளினார். இதனால்தான் நரகாசுரன் இறந்த நாளை இந்துக்கள் தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர் என்று ஐதீகம் கூறுகிறது.இந்த நன்னாளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பல வகை பண்டங்கள் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறோம். தீபாவளி இங்கு மட்டும் கொண்டாடப்படுவதில்லை. உலகம் முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள் உண்டு. இந்த நாளில் தீபங்களை வரிசையாக வைத்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள். ராமபிரான் இலங்கை சென்று ராவணனோடு கடும் போர் புரிந்து, தனது இல்லாளான (மனைவி) சீதா பிராட்டியாரை மீட்டுக் கொண்டு அயோத்திக்கு திரும்பி வந்தார். தன் வனவாசம் முடிந்து நாட்டை ஆள வரும் வெற்றி வீரர் ராமரை வரவேற்க மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக தீபங்களை ஏற்றி கொண்டாடினார்கள். அதனால்தான் தீபாவளி அன்று திருவிளக்குகளை வரிசையாக ஏற்றி வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாக கூறுவார்கள். தீபாவளியை நரக சதுர்த்தசி என்றும் அழைப்பார்கள். ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் இருப்பார். அப்போது தேய்ப்பிறையான 14 ஆம் நாளில் கொண்டாடப்படும். திரியோதசி இரவு சதுர்தசி காலை கொண்டாடப் பெறுவதினால் இதற்கு நரக சதுர்த்தசி என்று வழங்கப்படுகிறது.
தொகுப்பு: சீனுபடங்கள்: ஜி.சிவக்குமார்