நன்றி குங்குமம் தோழி
பேத்தியின் காதல் திருமண பேச்சுவார்த்தைகளால் எங்கள் குடும்பத்தின் அமைதியும், ஒற்றுமையும் குலைந்து போகுமோ என்று பயமும், கூடவே குழப்பமும் ஏற்பட்டுள்ளது. ‘அந்த பேத்தியை கைகழுவி விட்டு விடுங்கள்’ என்று மற்றவர்களும், உறவினர்களும் சொல்கின்றனர். அப்படி செய்தால் ஏதாவது புதிதாக பிரச்னைகள், குழப்பங்கள் வருமோ என்று கவலையாக இருக்கிறது. இதற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இதற்கு நீதான் வழி சொல்ல வேண்டும் தோழி போன்ற மகளே!
இப்படிக்கு
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
நட்புடன் தோழிக்கு,நானும் உங்களை அம்மாவாக நினைத்துதான், உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன். உங்கள் பேத்தி வேற்று மதத்தவரை காதலித்துள்ளார். அதை ஏற்பதில் உங்களுக்கு சிக்கல் உள்ளது. அவர் மதம் மாறிய பிறகும் உங்களுக்கு ஒப்பவில்லை என்று தோன்றுகிறது. இதில் உங்களின் விருப்பத்தை விட திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் ஆணின் விருப்பம் தான் முக்கியமானது. அதற்கு அடுத்துதான் பெற்றோர்களின் விருப்பமும், பங்களிப்பும். நீங்கள் இந்த வயதான காலத்தில் இதைப்பற்றி அதிகமாக யோசிப்பது சரியானதாக இருக்காது. நீங்கள் குழப்பமடைய தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது இரண்டு மனங்களின் இணைப்பு. அது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது. சில குடும்பங்கள் காதல் திருமணங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும். முக்கியமாக வேறு மதம், வேறு சாதி என்றால் இப்படி எதிர்ப்பார்கள். உங்கள் குடும்பத்தவர்கள் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்பது உங்களுக்கு தான் தெரியும். அக்கம்பக்கத்தினர் உங்கள் குடும்பம் சார்ந்த விஷயங்களில், முடிவுகளில் தலையிடுவது தேவையில்லாதது. நீங்கள் எடுக்கும் முடிவுக்கான விளைவுகளை நீங்கள்தான் சந்திக்க நேரிடும். நீங்கள் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசியுங்கள். உங்கள் பேத்தியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவுதான் சரியாக இருக்கும். எனவே உங்கள் பேத்தியுடன் கலந்து ஆலோசித்து என்ன முடிவு ஏற்புடையதாக இருக்கும் என்று தீர்மானியுங்கள். இதில் உங்கள் பேத்தியின் முடிவுதான் முக்கியம். உங்கள் பேத்திக்கும், அவளது காதலருக்கும் தங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமையுள்ளது. அப்படி திருமணம் செய்தால், அவளை ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு சிக்கல் இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதை எப்படி சமாளிப்பது என்று நீங்கள்தான் யோசிக்க வேண்டும். ஒருவேளை அவளை ஒதுக்கி வைத்தால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டும். உங்கள் பேத்தியின் காதல் திருமணம் சம்பந்தமாக உங்களின் மனநிலை என்ன? உங்களால் அந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறதா இல்லை உங்கள் பேத்தியுடன் உறவை முடித்துக் கொள்ளலாமா என்று முடிவெடுக்கும் உரிமை உங்களை சார்ந்தது. எந்த முடிவு எடுத்தாலும் அதன் சாதக, பாதகங்களை கருத்தில் கொண்டு உங்களால் மனதளவில் ஏற்றுக் கொள்ளும்படியாக முடிவெடுங்கள்.ஒரு வேளை உங்கள் பேத்தியின் திருமணத்தால் மற்ற பேத்தி, பேரன்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்று கருதினால் இது சம்பந்தமாக நீங்கள் உங்கள் பேத்தியுடன் கலந்து ஆலோசிக்கலாம். உடலளவில் உங்களுக்கு பாதிப்புகள் உள்ளன. ஆகையால் நீங்கள் மனதைப் போட்டு குழப்பிக் கொண்டு இருக்காமல் உங்கள் மகள், மருமகன்,பேத்தி மற்றும் குடும்பத்தினருடன் விவாதித்து நல்ல முடிவை எடுங்கள்.ஒருவேளை அவர்கள் முடிவு செய்வதில் உங்களுக்கு விருப்பமில்லை எனில் அவர்களின் போக்கிற்கு விட்டுவிடுங்கள். நீங்கள் அதிகமாக உங்களை ஈடுபடுத்திக் கொண்டு மனதளவிலும் உடலளவிலும் உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். அதுதான் உங்கள் மன நலத்திற்கும், உடல் நலத்திற்கும் நல்லது.தொகுப்பு: ஜெயா பிள்ளைஎன்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி‘என்ன செய்வது தோழி?’ குங்குமம் தோழி,தபால் பெட்டி எண்: 2924எண்: 229, கச்சேரி சாலை,மயிலாப்பூர், சென்னை - 600 004வாசகிகள் கவனத்துக்கு,
பிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...