புலம்பெயர் தொழிலாளராக துர்கா தேவி

நன்றி குங்குமம் தோழி

தீபாவளி ஸ்பெஷல்

துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது கொல்கத்தாவின் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் துர்கா தேவி பத்து கைகளுடன் ஆயுதம் ஏந்திய நிலையில் மிகவும் ஆக்ரோஷமாக அவதரிப்பார். சாமானிய பெண்ணின் உருவில் கையில் குழந்தைகளையும் உணவையும் ஏந்திய நிலையில் புலம்பெயர் தொழிலாளர் பெண்ணாக கொல்கத்தாவின் பந்தல் ஒன்றில் துர்காதேவி அவதரித்திருப்பது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கில் மூட்டை முடிச்சுகளோடு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தே அவரவர் கிராமங்களை நோக்கி புறப்பட்ட காட்சி நம் கண் முன் அப்படியே இருக்க, பல ஆயிரம் கிலோமீட்டர்களை அவர்கள் நடந்தே கடந்ததை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

பெரும்பாலும் பெண்கள் தங்கள் குழந்தைகளை சுமந்த நிலையில், உணவு தானியப் பைகளையும் ஏந்தி கால்நடையாகவே பயணித்தனர். இந்நிலையில் சராசரி இந்திய ஊரக பகுதிகளை சேர்ந்த பெண்களின் உருவில் துர்கை அவதரித்தால் எப்படியிருக்கும் என்ற யோசனை கலை இயக்குனர் ரிந்து தாஸ் என்பவருக்கு வர, அதற்கு உயிர் கொடுத்துள்ளார் சிற்பி பல்லப் பவ்மிக்.

ஊடகத்தினர் முன்பு அவர் பேசும்போது, “துர்கா தேவி மூலமாக இந்த சமூகத்திற்கு செய்தி சொல்ல விரும்பினேன். அதனால் துர்கா தேவி நகைகளை அணிந்து கையில் ஆயுதம் ஏந்தாமல் குழந்தைகளையும், உணவு தானியங்களையும் ஏந்தி நடந்து செல்லும் எளிமையான பெண்ணாக வடிவமைக்க முடிவு செய்தேன். ஊரடங்கு நேரத்தில் தொலைக்காட்சிகளில் பார்த்ததும், செய்தித்தாள்களில் படித்ததும் என் நினைவில் அப்படியே பதிந்துவிட்டது. அவர்களில் சிலர் போகும் வழியிலே இறந்தும் போனார்கள். அப்போது குழந்தைகளுடன் வீட்டிற்கு நடந்து செல்லும் பெண்களின் அழியாத துணிவு என்னை உலுக்கியது. என் மனதில், அவர்களை தெய்வங்களாக உருவகப்படுத்தினேன்.

வண்ணங்கள் ஏதுமின்றி மிகவும் எளிமையாய் துர்கா தேவி அசல் தன்மையோடு இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டேன். சேலை அணிந்திருக்கும் அப்பெண், சட்டை கூட அணியாத ஒரு குழந்தையை ஏந்தி நடந்து செல்கிறார். அந்தப் பெண்தான் அன்னை துர்கை. தனது குழந்தைகளுடன் சேர்ந்து வெயிலையும், பசியையும் எதிர்கொள்ளும் துணிச்சலான பெண். அவர் தனது குழந்தைகளுக்கு உணவு, தண்ணீர் மற்றும் நிவாரணம் தேடுகிறார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் பெஹாலாவில் உள்ள பாரிஷா கிளப் துர்கா பூஜா கமிட்டி, வேலை இழந்து, பிழைக்க வழியற்று, நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்ற பெண் தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவர்கள் அனுபவித்த வலியை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதத்திலும்,  துர்கா தேவியின்  பாரம்பரிய சிலையை வைக்கும் இடத்தில், துர்கையின் அம்சமாக புலம் பெயர்ந்த பெண் தொழிலாளியின் சிலையை வைத்துள்ளனர்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: