ரயில்வே தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் குறைகளை மிகுந்த கவனத்துடன் கையாள்வோம் : ரயில்வே அமைச்சர் அஷ்வினி உறுதி!!

டெல்லி : ரயில்வே தேர்வர்கள் மற்றும் தேர்வெழுத விரும்புவோரின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை நாங்கள் மிகுந்த கவனத்துடன் கையாள்வோம் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

டிடி நியூஸ் தொலைக்காட்சியுடனான தமது உரையாடலின் போது, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்ஆர்பி நடத்திய தேர்வு ஒன்று குறித்து சில விண்ணப்பதாரர்கள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து பதிலளித்தார்.இந்த விவகாரம் மிகுந்த கவனத்துடன் கையாளப்படும் என்று கூறிய அவர், இதற்காக அமைக்கப்பட்ட மூத்த அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழு, தேர்வர்களின் கருத்துகளை ஏற்கனவே பெறத் தொடங்கியுள்ளது என்றார்.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய மூத்த அதிகாரிகள் மாணவர் குழுக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைப்  பெறுகிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர் அஷ்வினி, தேர்வர்கள்/மாணவர்களின் அனைத்துப் பிரச்சினைகளும் மிகுந்த கவனத்துடன் தீர்க்கப்படும் என்றும், யாருடைய வார்த்தைகளாலும் குழப்பமடையவோ அல்லது பாதிப்படையவோ தேவையில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும், ரயில்வே உள்கட்டமைப்பு என்பது பொதுச் சொத்து என்பதால், சாலை மறியலோ, ரயிலை எரிக்கவோ, தீ வைக்கவோ தேவையில்லை என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

 இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்துப் பேசிய அஷ்வினி வைஷ்ணவ், தேர்வர்களின் கவலைகள்/குறைகளை ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, ஆட்சேர்ப்புச் செயல்பாட்டில் பரந்த அனுபவமுள்ள மிக மூத்த அதிகாரிகளைக் கொண்டது என்றார். சம்பந்தப்பட்ட மாணவர்கள்/தேர்வர்கள் தங்களின் குறைகள்/கவலைகளை மூன்று வாரங்களுக்குள் அதாவது 16.02.2022-க்குள் குழுவிடம் சமர்பிக்குமாறும், அதன்பிறகு உடனடியாகத் தீர்வு காண்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.

Related Stories: