நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பொதுக்கூட்டங்கள், பேனர் சைக்கிள் பேரணிக்கு தடை: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

தாம்பரம்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த  மாதம் 19ம்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடு குறித்து, நேற்று செய்தியாளர்களை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தாம்பரம் மாநகராட்சியில் 7 லட்சத்து 76 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 70 வார்டுகளுக்கு 703 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, வேட்பாளரோ அல்லது அவர் பெயரை முன்மொழிபவரோதான் வேட்பு மனுவை தாக்கல் செய்யவேண்டும். சைக்கிள் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. உள்ளரங்கு சந்திப்பிற்கு மட்டும் நூறு பேர் வரையில் அனுமதி அளிக்கப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்று கூட்டம் நடத்திக்கொள்ளலாம். சுவர் விளம்பரங்கள், பேனர்கள் வைப்பதற்கு அனுமதி கிடையாது. விதிமீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தும் அனைத்து உதவி அலுவலர்களுக்கும்  ஒரு பறக்கும் படையினர் அடிப்படையில், 7 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு 8 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

பிப்ரவரி 4ம் தேதி வேட்புமனு பெற இறுதி நாள். கலந்தாய்வு 5ம்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். பிப்ரவரி 7ம் தேதி மதியம் 3 மணி வரை விண்ணப்பங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 22ம்தேதி குரோம்பேட்டையில் உள்ள தொழிநுட்பக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ம் தேதி தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்,  துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், இன்ஸ்பெக்டர்களுடன் கலந்து ஆலோசித்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

75  வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

தாம்பரம் மாநகராட்சியில்  75  வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு சிசிடிவி கேமரா  உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். மற்ற  வாக்குச்சாவடிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். 7 பறக்கும்படை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தேர்தல் பணிகளை கண்காணிப்பார்கள்.

Related Stories: