சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு மற்றும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் காங்கிரஸ் தகவல் அறியும் சட்டத்துறை தலைவர் கனகராஜ் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சை மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மதமாற்றம் காரணமாக மாணவி உயிரிழந்ததாக பாஜ தலைவர் அண்ணாலை, நடிகை குஷ்பு சுந்தர், எச்.ராஜா ஆகியோர் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ள நிலையில் இவர்கள் வழக்கை திசை திருப்பும் முயற்சியில் பொய்யான செய்திகளை பரப்பில் வருகின்றனர்.
மேலும், பொதுமக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் இவர்களது போராட்டம் அமைந்துள்ளது. பூக்கடை போல் இருக்கக்கூடிய தமிழகத்தை சாக்கடை போல மாற்றும் நோக்கிலும், அமைதியை சீர்குலைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்டு வரும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு, எச்.ராஜா ஆகியோர் மீது ஐபிசி 153(ஏ),295(ஏ),505, 298, 509, 341, 332 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.