×

வேட்புமனு பெறுதல், பரிசீலனை, சின்னங்கள் ஒதுக்கீடு பணிகளை சிசிடிவி மூலம் கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு பெறுதல், பரிசீலனை, சின்னங்கள் ஒதுக்கீடு பணிகளை சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று  மாவட்ட தேர்தல் பார்வையாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில்  இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் நேற்று நடந்தது.
இதில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், தேர்தலின்போது  தேர்தல் பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

அப்போது, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேசியதாவது:
உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, வேட்பு மனு பெறுதல், வேட்பு மனு பரிசீலனை, சின்னங்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் சிசிடிவி மூலம் கண்காணித்திடவும், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறையிலும் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வாக்குச்சாவடிகள் வைப்பு அறை, வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதையும் உறுதி செய்ய வேண்டும். வட்டார பார்வையாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் ஆகியோரின் தேர்தல் தொடர்பான பணிகளையும் கண்காணிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் எளிதில் வந்து வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

வேட்பு மனு தாக்கலின் போது வேட்பு மனுதாக்கல் செய்பவர்கள் மற்றும் உடன் வருபவர்கள் முறையாக முகக்கவசம் அணிந்தும், வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டும், சமூக இடைவெளி கடைபிடிப்பதை கண்காணிக்க வேண்டும். மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கூட்டத்தின்போது, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறுவதை கண்காணித்திட வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் சுதந்திரமாக வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்.

வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது எவ்விதமான விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல் நடுநிலையோடு வேட்பு மனு பரிசீலனை நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும். மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாகவும், முறையாகவும் கடைபிடிக்கப்படுவதையும், வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் முழுமையாக சென்றடைவதையும் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்து, வாக்காளர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதற்கு ஏதுவாக தகுந்த ஏற்பாடுகள் மற்றும் வாக்குப்பதிவு முடிவுற்ற பின் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தக்க பாதுகாப்போடு கொண்டு செல்வதற்கு எடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை வெளிப்படை தன்மையுடனும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் முதன்மை தேர்தல் அலுவலர்கள் தனலட்சுமி (நகராட்சிகள்), அ.சுப்பிரமணியம் (ஊராட்சிகள்),  உதவி ஆணையர் (தேர்தல்) அகஜி சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : Nomination Receipt, Review, Icons Allocation, Polling Station,
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...