சீனாவின் வுகான் ஆய்வாளர்கள் எச்சரிக்கை; மூன்றில் ஒருவரின் உயிரை பறிக்கும் கொலைகார வைரஸ் கண்டுபிடிப்பு: எந்த தடுப்பூசியாலும் தடுக்க முடியாது

புதுடெல்லி: ஒமிக்ரானை போல வேகமாக பரவக்கூடியதும், பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவரின் உயிரை பறிக்கக் கூடியதுமான ‘நியோகோவ்’ எனும் கொலைகார வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டு உள்ளதாக சீனாவின் வுகான் ஆய்வாளர்கள் எச்சரித்திருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் டெல்டா வகை கொரோனா  வைரஸ் பல உயிர்களை பறித்த நிலையில், அடுத்ததாக உருவான ஒமிக்ரான் வைரஸ், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

வேகமாக பரவினாலும் ஒமிக்ரானால் இறப்புகள் குறைவு என்பதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிம்மதியை கெடுக்கும் வகையில், கடந்த 2019ல் முதன் முதலாக கொரோனாவை வைரசை கண்டறிந்த சீனாவின் வுகான் ஆய்வக ஆய்வாளர்கள் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர். உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட தென் ஆப்ரிக்காவில் சில வவ்வால்களிடம் ‘நியோகோவ்’ எனும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இது புதுவகை வைரஸ் அல்ல.

விலங்குகளிடம் பரவக் கூடியவை. ஆனாலும், இந்த வைரசும் அதன் மற்றொரு பிரிவான பிடிஎப்-2180-கோவ் ஆகியவையும் மனிதர்களை பாதிக்கக் கூடும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சீன ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். வுகான் பல்கலைக்கழகம் மற்றும் சீன அறிவியல் கழகத்தின் உயிரி இயற்பியல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள், மனித உயிரணுக்களில் நியோகோவ் வைரஸ் ஊடுருவுவதற்கு ஒரே ஒரு பிறழ்வு மட்டுமே தேவைப்படுவதாகவும், அந்த பிறழ்வு நடந்து விட்டால் நியோகோவ் வைரஸ்களும் மனிதர்களுக்கு பரவத் தொடங்கிவிடும் என்று கூறி உள்ளனர்.

இந்த வைரசை தற்போதுள்ள எந்த தடுப்பூசியாலும் தடுக்க முடியாது என கூறி உள்ள சீன ஆய்வாளர்கள், வைரஸ் பாதித்த மூன்றில் ஒருவரின் உயிரை பறிக்கக் கூடிய கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர். ஆனால், இந்த வைரஸ் குறித்து ரஷ்ய ஆய்வாளர்கள் மாறுபட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ரஷ்ய அரசின் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தென் ஆப்ரிக்காவில் வவ்வால்களிடம் கண்டறியப்பட்ட நியோகோவ் மாறுபாடு, சார்ஸ் கோவ்-2 வைரஸ் ஏற்படுத்தும் அறிகுறிகளையும் விளைவுகளையும் கொண்ட மெர்ஸ் காய்ச்சலை போலவே உள்ளது.

2012 முதல் 2015 வரை மத்திய கிழக்கு நாடுகளில் மெர்ஸ் காய்ச்சல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இது மனிதர்களிடையே தீவிரமாக பரவும் திறன் கொண்ட புதிய கொரோனா வைரஸ் அல்ல,’ என கூறப்பட்டுள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 6 லட்சமாகும்.

* நேற்று ஒரே நாளில் 627 பேர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4 லட்சத்து 92 ஆயிரத்து 327 ஆக அதிகரித்துள்ளது.

* சுமார் 21 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாராந்திர தொற்று பாசிடிவ் விகிதம் 19.59 சதவீதத்தில் இருந்து 15.88 சதவீதமாக சரிந்துள்ளது.

3ம் கட்ட சோதனையில் மூக்கு வழி தடுப்பு மருந்து

கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம், மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இதன் 3ம் கட்ட பரிசோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நேற்று அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, நாட்டின் 9 இடங்களில் 3 கட்ட பரிசோதனை நடத்தப்படும் என பாரத் பியோடெக் நிறுவனம் கூறி உள்ளது. இந்த பரிசோதனை, 2 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் மேற்கொள்ளப்படும். எனவே, கோவாக்சின் பூஸ்டர் டோசாக இந்த மூக்கு வழி மருந்து வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அடுத்த வைரஸ் மாறுபாடு சாதாரணமாக இருக்காது

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், ‘‘ஒமிக்ரான் முந்தைய வைரஸ்களை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், அடுத்தடுத்து வரும் உருமாற்ற வைரஸ்கள் இதே போல சாதாரணமாக இருக்கும் என்று கூற முடியாது. வேகமாக பரவக்கூடிய, அதிக உயிர்களை பலி வாங்கக் கூடிய தீவிரமான வைரஸ்கள் எதிர்காலத்தில் உருவாகக் கூடும். எனவே, கொரோனா பரவல் நடவடிக்கைகளை மக்கள் அனைவரும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும்’,’ என்றார்.

Related Stories: