7 நாட்களாக தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் 8 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்: 6 பேர் கைது

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 7 நாட்கள் கஞ்சா விற்பனை தொடர்பான சிறப்பு சோதனை மேற்கொண்டு, கஞ்சா வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 குற்றவாளிகள் கைது.  ரூ.81,500 மதிப்புள்ள 8 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும்  1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 21.01.2022 முதல் 27.01.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூபாய்.81,500/- மதிப்புள்ள 8 கிலோ 150 கிராம் எடை கொண்ட கஞ்சா, மற்றும் சட்ட விரோத கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம்  பறிமுதல் செய்யப்பட்டது.  இதில் குறிப்பிடும்படியாக H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 26.01.2022 அன்று மாலை, புது வண்ணாரப்பேட்டை, இளையா தெருவில் உள்ள பூங்கா அருகில் வாகனத் தணிக்கையின்போது, இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த தினகராஜ், வ/27, த/பெ.பாஸ்கர், தாமோதரன் நகர் 5வது தெரு, முல்லை நகர், வியாசர்பாடி, சென்னை மற்றும் அவரது மனைவி பிரியா, வ/26, க/பெ.தினகராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஹோண்டா டியோ இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரியா மீது  P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் 2016ம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்தது தொடர்பான வழக்கும், மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பான வழக்கும் உள்ளது தெரியவந்தது.

 இதே போல, N-2 காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 23.01.2022 அன்று காலை காசிமேடு, அத்திப்பட்டு பள்ளம் அருகே ரகசியமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த பரத்குமார் (எ) பரத், வ/20, த/பெ.குப்பன், எண்.27/57, துரை தெரு, காசிமேடு, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் பரத்குமார் (எ) பரத் N-2 காசிமேடு காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 2 கொலை வழக்குகள் மற்றும்   10 கொலை முயற்சி வழக்குகள் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையிலுள்ளதும் தெரியவந்தது.  ஆகவே, சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர்சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: