பாணாவரம் அருகே பட்டப்பகலில் தொடரும் துணிகரம் மேஸ்திரி வீட்டில் 11 சவரன் நகை, ₹5 ஆயிரம் திருட்டு-தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி

பாணாவரம் : பாணாவரம் அருகே மேஸ்திரி வீட்டில் பட்டப்பகலில் நகை, பணம் திருட்டு போனது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்,  பாணாவரம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (28) மேஸ்திரி. இவரது மனைவி பிரியங்கா (23). இந்நிலையில், நேற்று காலை வெங்கடேசன் அரக்கோணத்திற்கு வேலைக்கும்,  அவரது மனைவி வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கும்  சென்றுவிட்டனர். வீட்டில் தன்னந்தனியாக வெங்கடேசன் தாய் இந்திராணி மட்டும் இருந்துள்ளார். மதியம் மாட்டிற்கு தண்ணி காட்ட இந்திராணி வீட்டைப் பூட்டி சென்றுள்ளார்.

மீண்டும் வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மீது வைத்திருந்த சாவி மூலம் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 11 சவரன் நகை, ரொக்கம் ₹5 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் மேசிட் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் வரை ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிகர திருட்டு குறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 கடந்த 22ம் தேதி பாணாவரம் அரசு மருத்துவமனை எதிரிலும், 25ம் தேதி அய்யன்தாங்கல் கிராமத்திலும், இதேபோன்று திருட்டுச் சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. 6 நாட்களில் 3 திருட்டுச் சம்பவங்கள் இப்பகுதியில் நடந்துள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: