சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்பி, எம்எல்ஏக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் வேட்பாளர்கள் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. பொது செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், தயாநிதிமாறன் எம்பி, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடந்தது.