பந்தய புறா வளர்ப்பதில் தகராறு; கத்தியால் குத்தி வாலிபர் கொலை: 2 பேர் கைது

சென்னை: பந்தய புறா வளர்ப்பதில் ஏற்பட்ட பிரச்னையால், போைதயில் தூங்கிக் கொண்டிருந்த கட்டிட தொழிலாளியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் குட்டி கிராமணி தோட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் (34). கட்டிட தொழிலாளியான இவருக்கு கீதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். கீதா, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக கணவர் சதீஷை பிரிந்து, போரூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். சதீஷ் வசிக்கும் குடியிருப்பில் அவரது உறவினர் ரஞ்சித் என்பவர் பந்தய புறாக்களை அதிகளவில் தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.

இவர், பந்தய புறாக்கள் மூலம் அதிகளவில் பணம் சம்பாதித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பந்தய புறாக்கள் வளர்ப்பது சதீசுக்கு பிடிக்கவில்லை. இதனால், ரஞ்சித்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ரஞ்சித்திற்கு ஆதரவாக அவரது நண்பர் அதேபகுதியை சேர்ந்த ஹரிகரன் (19) என்பவரும், சதீசுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன்காரணமாக, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்வது வழக்கம் என கூறப்படுகிறது.

அதேநேரம், எதிர்தரப்பை சேர்ந்தவரின் தங்கையை சதீஷ் வழிமறித்து கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், ஹரிகரனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிகரன், நண்பர் ரஞ்சித்துடன் சேர்ந்து சதீஷை கொலை ெசய்ய முடிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில், சதீஷ் தனது வீட்டின் 3வது மாடியில், போதையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ரஞ்சித் மற்றும் ஹரிகரன் ஆகியோர் சதீஷை கொடூரமாக கத்தியால் முதுகு, மார்பு, தோள்பட்டை என உடல் முழுவதும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த சதீஷின் சகோதரன் சீனிவாசன், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சதீஷை காப்பாற்ற, உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். அதன்படி விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சதீஷை பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி திரும்பி சென்றனர்.

இதுகுறித்து சீனிவாசன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தபடி விரைந்து வந்த போலீசார், சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரஞ்சித் மற்றும் ஹரிகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ராஜா அண்ணாமலைபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: