புதுடெல்லி: ஒன்றிய அரசு பணிக்கு தேவையான ஐஏஎஸ் அதிகாரிகளை வழங்க மாநில அரசுகள் மறுப்பதாக ஒன்றிய அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனால், இந்த அதிகாரிகளை மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக தானே இடமாற்றம் செய்து கொள்வதற்கான அதிகாரத்தை பெறுவதற்காக, ஐஏஎஸ் விதிமுறைகளில் ஒன்றிய அரசு திருத்தம் செய்ய உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பாஜ அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் 9 மாநிலங்களின் முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஓய்வு பெற்ற 109 ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகள் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநில அரசுகளின் மீது கோபம் ஏற்படும் போது, அந்த மாநிலத்தின் முக்கிய அதிகாரிகளை ஒன்றிய அரசு குறி வைப்பதற்கு இந்த விதிமுறை திருத்தம் வழி வகுக்கும். இந்த சட்டத்தை ஒன்றிய அரசு தற்போது இருப்பது போல், சர்வாதிகாரத்துடன் துஷ்பிரயோகம் செய்யும். இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் இந்த செயலை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்,’ என கூறியுள்ளனர்.