சென்னை: போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் தங்கி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியதற்கான ஆவணங்கள் சிக்கியதை தொடர்ந்து அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கா என்பவர் 2019ம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் சென்னை வந்தார். பின்னர் கொரோனா கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மேரி பிரான்சிஸ்கா சென்னையிலேயே தங்க வேண்டிய நிலை இருந்தது.
இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் இருந்து மேரி பிரான்சிஸ்கா சென்னை விமான நிலையம் மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்ல விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரது பாஸ்போட்டை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கா இந்திய குடியுரிமை பெற்ற நபர் என்றும், அதற்கான இந்திய அரசின் பாஸ்போர்ட் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் மேரி பிரான்சிஸ்காவை பிடித்து க்யூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.
சுற்றுலா விசாவில் சென்னை வந்த மேரி பிரான்சிஸ்கா சென்னை அண்ணாநகரில் லீசுக்கு வீடு ஒன்று எடுத்து தங்கியுள்ளார். பிறகு வீடு லீசுக்கு எடுத்த ஆதாரங்களை வைத்து தங்களது வீடு என்று கூறி இலங்கை குடியுரிமையை மறைத்து இந்தியர் என்று ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை தயாரித்துள்ளார். அதை வைத்து இந்திய குடியுரிமை பெற்ற நபர் என்று பாஸ்போர்ட் எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், அவரது வங்கி கணக்குகளை க்யூ பிரிவு போலீசார் ஆய்வு செய்தபோது, விடுதலைப்புலிகளுக்கு ஆதராக சென்னையில் தங்கி நிதி திரட்டியதற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து க்யூ பிரிவு போலீசார் அதிரடியாக மேரி பிரான்சிஸ்காவை கைது செய்தனர். இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, மேரி பிரான்சிஸ்காவுக்கு விடுதலைப்புலிகளுடன் நேரடியாக தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களுக்கு நிதி திரட்டும் பணி காரணமாக சென்னை வந்து தங்கி இருந்ததும் உறுதியானது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள், போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கென்ஸ்டன் பெர்ணான்டோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், செல்லமுத்து ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனது விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.