பண்ருட்டி: பண்ருட்டி அருகே 4 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக அவனை அழைத்து சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மருங்கூர், கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன்(40), கார் டிரைவர். இவரது மகன் அஸ்வின்(4). இவன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தான். சற்று நேரம் கழித்து தாய் வந்து பார்த்தபோது காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்தில் செந்தில்நாதன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஒரு முந்திரி தோப்பில் ரத்தகாயங்களுடன் அஸ்வின் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரை சேர்ந்த இளம்பெண் ரஞ்சிதா சிறுவனை அழைத்து சென்றது தெரியவந்தது. உடனடியாக அவரை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சிறுவனின் தாய் தனலட்சுமி கூறுகையில், இரு வீட்டாருக்கும் முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக எனது மகனை அழைத்து சென்று கொலை செய்துவிட்டார். எதற்காக கொலை செய்தார் என்று விசாரணை நடத்த வேண்டும் என்றார்.