சின்னாளப்பட்டி: செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டியில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த 3 வீரக்கற்கள் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்த நடராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நாயக்கர் காலத்தை சார்ந்த 3 வீரக்கற்கள் இருப்பதை நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, பேராசிரியர் மாணிக்கராஜ் ஆகியோர் இப்பகுதியில் மேற்கொண்ட களஆய்வில் கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:இந்த ஊர் பிற்கால பாண்டியர் காலமான கி.பி 13ம் நூற்றாண்டில் ஆற்றூர் நாட்டு பிரிவின் கீழ் இருந்துள்ளது. நாயக்க மன்னர்கள் காலத்தில், ராமநாதபுரம் சேதுபதிகள் நாயக்க மன்னர்களுக்கு படைகளை கொடுத்து உதவியுள்ளனர். அவர்கள் அனுப்பிய படைகள் இவ்வூரில் முகாமிட்டு இருந்ததால் இந்த ஊருக்கு பாறைப்பட்டி என்ற பெயர் உருவானது என்ற தகவலும் உள்ளது. திண்டுக்கல் அருகேயுள்ள பெரிய பாறையை ஒட்டி உருவானதால் பாறைப்பட்டி என்ற பெயர் வந்ததாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.