மதுரை: மதுரையில் குடியரசு தினவிழாவில் விடுமுறை வழங்காத 168 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு அபராதமும் விதிக்கப்பட்டது. 73வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அரசு விழாவான அன்றைய தினத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். அவ்வாறு தொழிலாளர்களை அனுமதிக்கும்பட்சத்தில், அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். அதன் விவரத்தை விடுமுறை தினத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு விடுமுறை வழங்கப்படாத தனியார் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்கப்படுவது வழக்கம்.