குடியரசு தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு,தமிழ்நாடு அரசிடம் வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி!

சென்னை :  சென்னையில் குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது. சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி ஊழியர்களிடம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஒரு சில அதிகாரிகள் மட்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று பாடினர். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பலர் எழுந்து நிற்காமல் அமர்ந்து கொண்டே இருந்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர் இருக்கையில் அமர்ந்து இருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் ‘ஏன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நின்று மறியாதை செய்யவில்லை’  என்று கேட்டனர். அதற்கு அமர்ந்து இருந்த அதிகாரிகள் ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.... கோர்ட் உத்தரவிட்டுள்ளதா எழுந்து நிற்க வேண்டும் என்று.....’ கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காமல், அவமதித்து,  கேள்வி கேட்ட நபர்களிடம் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள், ஆர்பிஐ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி தலைமையிலான அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.சமீபத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: