கோத்தகிரி மாமரம் அருகே அனுமதியின்றி செயல்படும் தனியார் காட்டேஜ்கள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை கோரிக்கை

குன்னூர்:  கோத்தகிரி அருகே மாமரம் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் காட்டேஜை மூட மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பிய காட்டேஜ்களை இணையத்தில் மூலம் புக்கிங் செய்து தங்கி வருகின்றனர். சீசன் சமயங்களில் கடும் கிராக்கி ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு வரக்கூடிய சுற்றுலா பயணிகளிடையே பேரம் பேச சில ஏஜன்டுகள் இயங்கி வருகின்றனர். அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் சுற்றுலா பயணிகள் வேறு வழியின்றி அங்கு தங்கி வருகின்றனர். இது மட்டுமின்றி அனுமதியின்றி ஏராளமான காட்டேஜ்கள் இயங்கி வருகிறது.

யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து பல காட்டேஜ்கள் உருவாகியுள்ளன. அங்கு மின்சார வேலி அமைத்து வன விலங்குகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர். மேலும் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகளை காட்டுவதாக கூறி மாமிசங்களை பயண்படுத்தி சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளை ஈர்த்து அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.  இது போன்ற‌ அனுமதியின்றி செயல்படும் காட்டேஜ்களுக்கு பஞ்சாயத்து அதிகாரிகள் காட்டேஜ் உரிமையாளர்களிடம் பணம்‌ பெற்று கொண்டு அனுமதி வழங்குகின்றனர்.

இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மாமரம் அருகே அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் விவசாயம் என்ற போர்வையில் காட்டேஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது.  பழங்குடியின மக்கள் மட்டுமே வாழ்ந்து வரும் அந்த பகுதியில் காட்டேஜ் அமைத்து மின் வேலி அமைத்துள்ளனர். இந்த பகுதி கொணவக்கரை பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியாகும். பஞ்சாயத்து அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியுள்ளதாக பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: