உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவினால் பொருளாதார தடை விதிப்பது உறுதி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவினால் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பது உறுதி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சோவியத் ஒன்றியத்தின் ஒரு அங்கமாக இருந்த உக்ரைன் கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தனி நாடாக உருவானது. எனினும் அந்நாட்டில் ரஷ்ய மொழி பேசுவோர் அதிக எண்ணிக்கையில் இருப்பதோடு கலாச்சார ரீதியிலும், சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளை உக்ரைன் கொண்டுள்ளது. இந்நிலையில் நேக்ட்டோ அமைப்பு உக்ரைனை தன்னுடன் இணைத்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா உக்ரைன் எல்லை அருகே சுமார் 1 லட்சம் படையினரை குவித்துள்ளது.

உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்து கொள்வதற்காக ரஷ்யா படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன. ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுத்தாலும் இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது பேசிய அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவினால் நிச்சயமாக அதிபர் புதின் மீது தனிப்பட்ட முறையில் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தால் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய மிகப்பெரிய படையெடுப்பாக அமையும் என கூறினார். இது நடந்தால் மிகவும் மோசமான விளைவுகளை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் எச்சரித்தார். போர் சூழல் ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று கூறிய பைடன், அமைதியான சூழலை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொண்டால் அதை அமெரிக்கா ஆதரிக்கும் எனவும் கூறினார்.                 

Related Stories: