திருவள்ளூர்: மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவள்ளூர் நகராட்சி பள்ளியில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் தலைமை வகித்தார். வட்டார நிர்வாகிகள் தனஞ்செயன், மகாதேவன், பாலுமகேந்திரன், குமார், ரமணய்யா, பிரவீன், டி.ஸ்டீபன் சற்குணர், ஷிபா, மு.மகாலட்சுமி, பால்ராஜ் ரவி, மோகன் பாபு, காபிரியல், கோவர்த்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருவள்ளூர் மாவட்ட பொருளாளராக லோகய்யா, கல்வி மாவட்ட செயலாளராக எபிநேசர், கல்வி மாவட்ட தலைவராக சீனிவாசன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.