ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம் பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு

புதுடெல்லி: ரயில்வேயில் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரயில்வே வாரியம் சார்பில் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்காக 2019ம் ஆண்டு நடக்க வேண்டிய  போட்டித்தேர்வு கடந்தாண்டு ஏப்ரல்- ஜூன் கால கட்டத்தில் ஆன்லைன் மூலமாக  நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 14ம்  தேதி வெளியானது. ஆனால் தேர்வு முடிவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்வர்கள் புகார் தெரிவித்து பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் மூன்றாவது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் கயாவில் இருந்து வந்த பாபுவா-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ  வைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர் போராட்டங்கள் எதிரொலியாக என்டிபிசி மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வு செயல்முறைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

எனவே, என்டிபிசி மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலமாக தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்வில் தோல்வியடைந்தவர்களின் குறைகளை கேட்டறியும் வகையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் குறை மற்றும் புகார்களை rrbcommittee@railnet.gov.in, என இணையத்தளத்தில் பிப்.16ம் தேதி வரை பதிவு செய்யலாம். மார்ச் 4ம் தேதி குழு தனது அறிக்கையை சமர்பிக்கும்’ என்றார். முன்னதாக நேற்று முன்தினம் ரயில்வே சொத்துக்களை சீர்குலைப்பது போன்ற  நடவடிக்கைகளில் ஈடுபடும் தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் ரயில்வே பணிகளில்  சேருவதற்கு தடை விதிக்கப்படும் என்று ரயில்வே எச்சரித்தது  குறிப்பிடத்தக்கது.

* உங்கள் சொத்தை அழிக்க வேண்டாம்

தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்து கூறுகையில், ‘தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட வேண்டும். உங்கள் சொத்துகளை ஏன் அழிக்கிறீர்கள். பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுப்பார்கள். உங்கள் குறைகளை முறையாக தெரிவியுங்கள். இதற்காக தான் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

* பிரியங்கா காந்தி கண்டனம்

பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘ரயில்வேயின் என்டிபிசி மற்றும் குரூப் 2 தேர்வர்கள் மீதான அடக்குமுறை கண்டனத்துக்குரியது. இரண்டு தேர்வுகளிலும் தொடர்புடைய தேர்வர்களிடம் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் பிரச்னையை தீர்க்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: