×

முகக்கவசம் தயாரிப்பில் வருமானம் பார்க்கலாம்..!

நன்றி குங்குமம் தோழி

தொழில்  வருமானம் இல்லாமலிருக்கும்  இந்த சமயத்தில் பிரேன்ஸ்டார்மிங் என்று சொல்லப்படும் புதுப்புது ஐடியாக்களை உருவாக்கும் காலமாக இந்த கொரோனா தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அமைந்திருக்கிறது. பொதுவாக முகக்கவசங்கள் டூப்ளே மூன்று ரூபாயும், த்ரீ ப்ளே ஐந்து ரூபாய் வரையும் விற்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தாக்கத்தால் இருபத்தைந்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த முகக்கவசம் தயாரித்தால் வெளியிலிருந்து முகக்கவசம் வாங்குவதை நிறுத்துவதோடு உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் விற்பனை செய்தால் சிறிய அளவிலான வருமானத்தைப் பார்க்கலாம் என்கிறார் அர்ச்சனா நாராயணன்.

‘‘கொரோனா எனும் கொடிய தொற்று நோய் கோவிட் -19  ( Covid-19) லிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள பல வழிகளில் முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. இனி வரும் காலங்களில் முகக்கவசம் இல்லாமல் நாம் எங்கும் பயணிக்க முடியாது என்ற கட்டத்திற்கு தள்ளப்பட்டுவிடுவோம் என்று கூட சொல்லலாம். இதில் பல வகை இருந்தாலும் நம் சருமத்தை பாதிக்காமல் பாதுகாப்பது என்றால் அது பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் தான்.
அத்தகைய முகக் கவசத்தை நாமே வீட்டில் இருந்தபடியே தயார் செய்யலாம். மேலும் இதனை ஒரு முறை பயன்படுத்திவிட்டு மறுபடியும் துவைத்து பயன்படுத்தலாம். பருத்தி துணியினால் செய்யப்பட்ட அழகிய வடிவங்களில் முகக்கவசம் செய்வதற்கான செலவும் மிக மிக குறைவு. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் 2 அல்லது 3 தயார் பண்ணலாமே. அதுமட்டுமல்லாது வீட்டின் நபர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வர்ணத்தில், அவர்களின் உடைகளுக்கு மேட்சாகவும் செய்து உபயோகப்படுத்தினால் மிகவும் அருமையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

1. பருத்தி துணி - 1/4 மீட்டர்
2. ஊசி நூல்
3. இன்ச் டேப்
4. பென்சில்
5. ஏ4 சைஸ் பேப்பர்
6. கத்திரிக்கோல்
7. பெவிக்கிரில் பேப்ரிக் கலர்ஸ்
8. பிரஷ்
9. 3டி அவுட் லைனர்ஸ்

செய்முறை

முதலில் ஸ்டெப் 1-ல் உள்ளபடி ஒரு பேப்பரில் 15 செ.மீ அகலத்திற்கு 14 செ.மீ நீளத்திற்கு வெட்டிக்கொண்டு அதை இரண்டாக மடித்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 2 படத்தில் இருப்பது போல் கோடிட்ட பகுதியை வெட்டிக் கொள்ளவும். இதுதான் மாஸ்க்கின் டெம்பிளேட்.

ஸ்டெப் 3, டெம்பிளேட்டை துணியின் மேல் வைத்து பென்சிலால் வரைந்து 4 துண்டுகள் வெட்டிக் கொள்ளவும்.

ஸ்டெப் 4 மற்றும் 5, இரண்டு துண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து படத்தில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளபடி தைத்துக்கொள்ளவும். இதேபோன்று மற்ற 2 துண்டுகளையும் தைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 6, இரண்டு இரண்டாக சேர்த்து தைத்த 2 துண்டுகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும். அப்படி வைக்கும்போது முதல் துணியின் மேல் பாகம் ( நல்ல பக்கம் ) நம்மை பார்க்கும்படியும், அதன் மீது அடுத்தத் துணியை வைக்கும்போது அடிப்பக்கம் ( தையல் பக்கம்) நம்மை பார்க்கும் படியும் வைத்து படத்தில் காட்டியுள்ளபடி தைத்துக் கொள்ளவும். பின்பு இதனை உட்புறம் வெளிப்புறமாக திருப்பிக் கொள்ளவும்.

ஸ்டெப் 7, திருப்பிய பகுதியில் இரண்டு காதுகளுக்கு லூப்ஸ் அல்லது எலாஸ்டிக் வைத்து தைக்கவும்.

ஸ்டெப் 8, இப்போது அழகிய ஃபேஸ் மாஸ்க் தயார். அடுத்ததாக அதன் மீது நம் விருப்பப்படி அழகழகாக  ஃபெவிக்கிரில் ஃபேப்ரிக் கலர்களைக் கொண்டு வர்ணம் தீட்டினால், டிசைனர் மாஸ்க்  ரெடி.

கோவிட் - 19 என்னும் கொடிய தொற்று நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் நம் விருப்பத்திற்கேற்ப விதவிதமான ஆடைகளுக்கு ஏற்ப மேட்சிங்காக இதுபோன்ற டிசைனர் மாஸ்க் தயார் செய்து,  வியாபாரம் செய்யலாம். இனிவரும் காலங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது ஒரு கட்டாயமாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. குழந்தைகளுக்கென்றால் காதில் மாட்டக்கூடிய லூப்பின் அளவை சற்று குறைத்துக்கொள்ளவும்.  
மருத்துவத்துறை சம்பந்தப்பட்டது என்பதால் முகக்கவசம் தயாரிப்பின்போது கைகளில் உறை அணிந்தும், பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும்.

மருந்தகங் களில் விற்கப்படும் மாஸ்க் என்றால் அதற்கு அரசின் அங்கீகாரம் மற்றும் உரிமம் போன்றவை பெற வேண்டியிருக்கும். எல்லோராலும் அது சாத்தியப்படாது. ஆனால், முகத்தை மறைக்கும் பருத்தி துணியால் செய்யப்படும் முகக்கவசத்தை நம் எல்லோராலும் எளிதாகத் தயாரித்துவிட முடியும். அத்துடன், துணி அடுக்குகளுக்கு உள்ளே நம் நாட்டு மூலிகைப் பொருட்களை வைத்து தைத்தால் சுவாசக் கோளாறுகளை சரி செய்யும் என்பது கூடுதல் தகவல்’’ என்றார் அர்ச்சனா

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்