எம்எல்ஏக்களுக்கு ஆண்மையில்லை என்ற பேச்சு கூட்டணியை விட்டு பாஜவை வெளியேற்ற அதிமுக நிர்வாகிகள் நெருக்கடி: மோடியிடம் புகார் செய்ய எடப்பாடி முடிவு

சென்னை: அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஆண்மையில்லை என்று நயினார் நாகேந்திரன் பேசியதால், பாஜ கூட்டணிக்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணியை விட்டு பாஜவை வெளியேற்ற நிர்வாகிகள் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர். மோடியிடம் புகார் செய்யவும் எடப்பாடி முடிவு செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ 20 தொகுதியில் போட்டியிட்டு 4 ெதாகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, அடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாஜ வெற்றி பெற்றது. ஆனால், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது, பாஜவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜ தலைவர்கள் அதிமுகவை பற்றி தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜ இருப்பதாக ஒரு சில தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். சட்டப்பேரவையில் கூட அதிமுக-பாஜ தனித்தனியாக தான் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டு கட்சிகளிடம் தொடர்ந்து பனிப்போர் நீடித்து வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்நிலையில், இதை நிரூபிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தஞ்சை மாணவி லாவண்யா மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரி தமிழக பாஜ சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம்  நேற்று முன்தினம் நடந்தது.

இந்த போராட்டத்தில் பாஜ துணை தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும் போது, தமிழகத்தில் எதிர்க்கட்சி போல மக்கள் பிரச்னைகளை பாஜ தான் பேசி வருகிறது.  சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக ஆண்மையோடு பேசக்கூடிய ஒரு அதிமுக எம்எல்ஏவைக்கூட பார்க்க முடியவில்லை. எதிர்க்கட்சியாக இல்லாமல் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டிக்கொடுப்பவர் அண்ணாமலைதான் என்று பேசினார். அவரது இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி, துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோதும் அவர்களும் அதிமுக எம்எல்ஏக்கள் தான். எனவே, பாஜ துணை தலைவர் அதிமுக தலைவர்களை தான் குறி வைத்து பேசியதாக தொண்டர்கள் நினைக்கின்றனர்.

எனவே, பாஜவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதிமுகவின் மீது சவாரி செய்து கொண்டு 4 எம்எல்ஏக்கள் பதவியை பாஜ பிடித்துள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தலில் ஒரு சில வார்டுகள் பெற்றுள்ளது. எனவே, வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜவை கழட்டி விட வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதில், அதிமுக தோள் மீது தொற்றிக்கொண்டு பெற்ற எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிரூபியுங்கள்.

ஆண்மை என்பது சொல் அல்ல செயல் என்று அதிமுக நிர்வாகிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். நயினார் நாகேந்திரனின் பேச்சு அதிமுக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் டெல்லி செல்ல உள்ள நிலையில், பிரதமரிடம் நேரம் கேட்க முடிவு செய்து இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

* நயினார் நாகேந்திரன் கருத்துக்கள் தவறுதலாக வந்து விட்டது: எடப்பாடியிடம் மன்னிப்பு கேட்டதாக பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

நயினார் நாகேந்திரன் கருத்து பாஜவின் நிலைபாடு இல்லை. அவரது கருத்துக்கள் தவறுதலாக வந்துவிட்டது. அதிமுக பாஜ கூட்டணியில் எந்த சலனமும் ஏற்படாமல் பார்த்துக்  கொள்வேன் என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜ தலைமை  அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், அவர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

இதை தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் குடியரசு தின அணிவகுப்பு  இந்த வருடம் வித்தியாசமாக உள்ளது. குடியரசு நாளில் சுதந்திரத்திற்காக  பாடுபட்ட பாரதி, வேலு நாச்சியார், குயிலி உள்ளிட்ட அனைவரையும் அணிவகுப்பில்  காட்சிப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பாஜ சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கருத்து பாஜவின்  நிலைபாடு இல்லை. அவர் பேசிய வார்த்தைகள் தவறுதலாக வந்துவிட்டது. இது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன். அதிமுக பாஜக கூட்டணியில்  எந்த சலனமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம். அதிமுகவுக்கு பாஜ கடமைப்பட்டுள்ளது. அதிமுக எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாஜவில் இருந்துகொண்டே பாஜவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க மாட்டோம். பாஜவில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு, இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: