கஞ்சா சப்ளை, மோதல்களை தடுக்க நடவடிக்கை மத்திய சிறைகளில் பிளாக் வாரியாக பயோமெட்ரிக் லாக் சிஸ்டம் அமைப்பு: விரைவில் பணிகள் முடியும் என அதிகாரிகள் தகவல்

வேலூர்: தமிழக மத்திய சிறைகளில் முறைகேடுகள், மோதல்களை தடுக்க பிளாக் வாரியாக பயோமெட்ரிக் லாக் சிஸ்டம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் தனிச்சிறைகள், 12 பார்ஸ்டல் சிறைகள், 5 துணை சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 கிளை சிறைகள், 2 திறந்தவெளி சிறைகள் உள்ளன. இவற்றில் தற்போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறைக்குள் குறிப்பிட்ட பிளாக்கில் பணியாற்றும் காவலர், பணி இல்லாத பிளாக்கில் சென்று கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன், வினியோகம் செய்வதாக புகார்கள் எழுந்தது. மேலும் கைதிகள் வேறு பிளாக்கிற்கு சென்று மற்ற கைதிகளுடன் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், சிறையில் உள்ள பிளாக்கில் பயோமெட்ரிக் லாக் சிஸ்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சிறைகளில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் கைதிகள் வேறு பிளாக்கிற்கு விதிமீறி செல்வதாக புகார்கள் வந்ததது. இதனால் காவலர்கள் கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் உள்ளிட்ட தடை செய்வதாக புகார் உள்ளது. மேலும் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறையில் பணியாற்றும் உதவி சிறை அலுவலர், கைதிகளிடம் ரூ.20 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு செல்போன் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து உதவி சிறை அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடைபெறும் விதிமீறல்களை தடுக்கும் பயோமெட்ரிக் லாக் சிஸ்டம் அமைக்கும் பணி வேலூர் மத்திய சிறை உள்ளிட்ட மத்திய சிறைகளில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பயோமெட்ரிக் லாக் சிஸ்டம் ஒவ்வொரு பிளாக்கிற்கு பொருத்தப்படுகிறது. இதனால் அந்த பிளாக்கில் பணியாற்றும் காவலர் கைரேகை பதிவேற்றம் செய்யப்படும். அந்த காவலர் பணிக்கு வரும் போது, கைரேகை பதிவு செய்யும்போது தான், அந்த பிளாக்கின் கதவு திறக்கும். இந்த பயோமெட்ரிக் லாக் சிஸ்டம் மூலம் சிறை காவலர்கள் பணி ஒதுக்கீடு செய்யாத பிளாக்கிற்கு செல்ல முடியாது. அதேபோல் கைதிகளும் மற்ற பிளாக்கிற்கு செல்வதை தடுக்க முடியும். மேலும் சிறைக்குள் பிளாக்கிற்கு இடையே கைதிகளின் மோதலை தடுக்க வாய்ப்பு உள்ளது. இந்த பயோமெட்ரிக் லாக் சிஸ்டம் பொருத்தும் பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: