மதுரை: டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை புறக்கணித்த பாஜ அரசைக் கண்டித்து, சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், குயிலி, மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார் ஆகியோரது உருவப்படங்களை ஏந்தியும், அவர்களது முகமூடி அணிந்தும், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் இருந்து சிம்மக்கல் வஉசி சிலை பகுதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஊவலம் நடந்தது. ஊர்வலத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் நிருபர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், திருக்குறள் ஆன்மீகத்தின் ஊற்றுக்கண் என தமிழக கவர்னர் தெரிவித்துள்ளார். திருக்குறள் அனைத்து மக்களுக்குமான நூல். சமூகநீதி, சமூக கருத்துக்கள், சமூக ஒடுக்குமுறை உள்ளிட்டவற்றை எடுத்துச்சொல்லும் நூலாக திருக்குறள் உள்ளது. இதனை ஆன்மீகத்திற்குள் ஆளுநர் சுருக்கக்கூடாது. மாணவி லாவண்யா விவகாரத்தில் இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி, மதவெறி அரசியலை பரப்ப நினைக்கும் பாஜகவின் செயல் பலிக்காது. மற்ற மாநிலங்களை போல தமிழகத்தில் மதவெறி அரசியலுக்கு இடமில்லை. இதில் பாஜ படுதோல்வி அடையும்’’ என்றார்.