திருச்சி தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு வாலிபரின் இதயம், நுரையீரல் சென்னைக்கு அனுப்பி வைப்பு

திருச்சி: கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. இவரது மகன் பூபதி (18). இவர் கடந்த 20ம் தேதி ராமநத்தம் பகுதியில் பைக்கில் சென்றபோது சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து பூபதியை திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் பூபதி நேற்றுமுன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து பெற்றோர் சம்மதத்தின் பேரில் பூபதியில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. டாக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் நேற்று நடந்த உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பூபதியின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. முன்னதாக நேற்று பூபதியின் உறுப்புகள் அதற்குரிய மருத்துவ பெட்டியில் தேவையான முன்னெச்சரிக்கை மருத்துவ பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் 2 உடல் உறுப்புகள் அடங்கிய மருத்துவ பெட்டி பாதுகாப்புடன் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உதவியுடன் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ற இன்டிகோ விமானத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம்  திருச்சியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: