×

சமூகநீதி, பெண்ணுரிமையை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணி தொடங்கப்படும்: இணைய கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சமூகநீதியும், பெண்ணுரிமையும்தான் தலையாய லட்சியம். இந்த  மகத்தான கொள்கையை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் கொண்டு  சேர்க்கும் பணியை நாங்கள் தொடங்க இருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் என்ற தலைப்பிலான தேசிய இணைய கருத்தரங்கம் நடந்தது.

இதில், மகாராஷ்டிரா மாநில உணவு, நுகர்பொருள் வாணிபம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷகன் சந்திரகாந்த் புஜ்பால், ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆதிமுலப்பு சுரேஷ், எம்பிக்கள் பி.வில்சன், டெரிக் ஓ பிரையன், மனோஜ் குமார் ஜா, ஈ.டி.முகம்மது பஷீர், அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வீரேந்திர சிங் யாதவ், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ் வி.யாதவ், திக தலைவர் கி.வீரமணி மற்றும் சர்தார் தஜிந்தர் சிங் ஜல்லி, பி.டி. போர்க்கர், டாக்டர் ஹரி எப்பனபள்ளி (அமெரிக்கா), நீதியரசர் வி. ஈஸ்வரய்யா ஆகியோர் கலந்து கொண்டு, மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி உரையாற்றினர்.

அதன்பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றி பேசியதாவது: சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட ஒரு அகில இந்திய கூட்டமாக இந்த கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை பாராட்டு விழாவாக கருதாமல், அடுத்தக்கட்ட சமூக நீதி உரிமையை பாதுகாக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைக் கூட்டமாகவே கருதுகிறேன். காணொலி வாயிலாக கூட்டம் நடந்தாலும், கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருக்கிறது. இப்போது என் வருத்தம் எல்லாம், இதை காண்பதற்கு பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் இல்லையே என்பது மட்டும்தான். இந்தியா முழுவதும் சமூக நீதி பேரியக்கம் பரவ வேண்டும் என்று அவர்கள் மூவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்கள். அந்த உழைப்பு வீண் போகவில்லை.

திராவிட இயக்கம் போட்ட விதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் முளைக்க தொடங்கியிருக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை அனைத்து இந்திய மருத்துவக் கல்லூரிகளிலும் பெற்றிருப்பதன் மூலமாக, சமூகநீதி வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனை என்பது சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் மூலம் இந்தச் சாதனையை பெற்றிருக்கிறோம். இந்த போராட்டத்தில், திமுக மகத்தான பங்களிப்பை செய்துள்ளது என்பதை தலை நிமிர்ந்து சொல்வதை பெருமையாக நினைக்கிறேன்.

அனைத்து சமூகத்திற்குமான இட ஒதுக்கீட்டை 1921ம் ஆண்டு வழங்கியது நீதிக் கட்சியின் ஆட்சி. இந்த இட ஒதுக்கீட்டிற்கு, அதனுடைய முறைக்கு உச்ச நீதிமன்றத்தால் ஆபத்து வந்தபோது கடுமையாக போராடி 1950ம் ஆண்டு அரசியல் சட்டத் திருத்தத்தை செய்ய வைத்தவர்கள் பெரியாரும், அண்ணாவும், காமராஜரும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை 31 விழுக்காடாக ஆக்கியது திமுக. பட்டியலினத்தவர் இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக ஆக்கியதும் திமுக தான். இந்த 18 விழுக்காடில் பழங்குடியினரும் இருந்தார்கள். அவர்களுக்கு தனியாக 1 விழுக்காடு வழங்கி, முழுமையாக 18 விழுக்காடும் பட்டியலினத்தவர்களுக்கு கிடைக்க வழி செய்து இன்றைய 69 விழுக்காடை கொண்டுவந்தது திமுக.

மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்களையும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் திமுகதான். மிகவும் பிற்படுத்தப்பட்ட 107 சாதியினருக்கு தனியாக 20 விழுக்காடாக பிரித்து, மிகப் பிற்படுத்தப்பட்டோர் எனப் பெயரிட்டு ஒதுக்கீடு வழங்கியது திமுக. அருந்ததியினர்க்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது திமுக. இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது திமுக. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஒன்றிய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பிரதமர் வி.பி.சிங் மூலமாக வலியுறுத்தி அதையும் பெற்றோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நிறைவேற்றியது திமுக. சமூக நீதி கருத்தியலுக்கு செய்த மாபெரும் பங்களிப்பாகும்.

 இதனுடைய தொடர்ச்சியாக, 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை மருத்துவ படிப்புகளில் வழங்க வலியுறுத்தி போராடினோம், இப்போது பெற்றுத் தந்திருக்கிறோம். அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கலைஞர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஒன்றிய ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்லி வந்தார். திமுக தேர்தல் அறிக்கையில் எப்போதும் இடம்பெறும் கொள்கையாக அது அமைந்திருந்தது. 2019ம் ஆண்டு முதல் இதற்கான முனைப்புகளை அதிகமாக எடுத்தோம். நம்முடைய எம்பி தன்னுடைய சொந்த வழக்கைப் போல இதனை நடத்தினார்.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், அவரை வழக்கறிஞர் என்று சொல்வதைவிட சமூக நீதிப் போராளியாகவே செயல்பட்டார். இடஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு 2019ம் ஆண்டு பிரதமருக்கு கோரிக்கை வைத்தேன். திமுக எம்பிக்கள் இது குறித்து கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை எம்.பி வில்சன் சந்தித்து கடிதமும் கொடுத்து வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், ஒன்றிய அரசு சரியான பதிலைச் சொல்லாத காரணத்தால், ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தேன்.

இவர்களிடம் சும்மா கேட்டால் கிடைக்காது என்ற காரணத்தால் தான் 2020ம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கை தாக்கல் செய்தோம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினோம். திமுக தொடுத்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் போடச் சொன்னார்கள். அப்போதும் ஒன்றிய அரசு மனம் இரங்கவில்லை. சலோனி குமாரி வழக்கை காரணமாக காட்டினார்கள். அந்த வழக்கு முடிந்தால்தான் முடிவெடுக்க முடியும் என்று சாக்கு போக்கு சொன்னார்கள். தி.மு.க. போட்ட வழக்கு வேறு - சலோனி குமாரி வழக்கு வேறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கியாக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2021-22ம் ஆண்டிலிருந்து வழங்க வேண்டும் என்று உத்தரவும் போட்டது.  இதுதான் மிகப்பெரிய வெற்றியாகும். ஆனாலும், இதனை ஒன்றிய அரசு வழங்காத காரணத்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. முறையாக செயல்படுத்துங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 26.7.2021 அன்றுதான் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல், நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்குவதாகச் சொல்லி உறுதியளிக்கிறார்.

ஏதோ பா.ஜ. அரசுதான் இடஒதுக்கீடு உரிமை தூக்கிக் கொடுத்ததைப் போல பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை எதுவும் தெரியாது. 2020 மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு போட்டது. 2021ம் ஆண்டு சூலை மாதம்தான் பா.ஜ. அரசு இதனை ஒப்புக் கொண்டது. இந்த உண்மைகளை அவர்கள் மறக்கலாம். ஆனால் மறைக்க முடியாது. ரத்த பேதம் இல்லை - பால் பேதம் இல்லை என்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படை லட்சியம் ஆகும். சமூகநீதியும் - பெண்ணுரிமையும்தான் தலையாய லட்சியம் ஆகும்.இந்த மகத்தான கொள்கையைத் தமிழத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் பணியை நாங்கள் தொடங்க இருக்கிறோம். சமூகநீதி என்பது சமூக சமத்துவம் ஆகும். அது கல்வியில் வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் உருவாக்கப்பட வேண்டும்.

Tags : Chief Minister ,MK Stalin , Launch of work to bring social justice and feminism across the country: Chief Minister MK Stalin's speech at an online seminar
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...