ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் பனிபொழிவு துவங்கும். இம்முறை பனிப்பொழிவு சற்று தாமதமாக டிசம்பர் 2வது வாரத்தில் துவங்கியது. ஆரம்பம் முதலே உறைப்பனி பொழிவு கொட்டியது. ஊட்டி அருகே தலைக்குந்தா, சோலூர் மற்றும் அவலாஞ்சி பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி முதல் மைனஸ் 1 டிகிரிக்கும் கீழ் சென்றது. இம்மாத துவக்கத்தில் சில நாட்கள் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக நீலகிாி மாவட்டத்தில் மீண்டும் உறைபனி பொழிவு கடுமையாக இருந்து வருகிறது. தாவரவியல் பூங்கா, குதிரைபந்தய மைதானம், தலைகுந்தா, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளில் உள்ள புல் மைதானங்களில் உறைபனி கொட்டுகிறது.