ஆங்காங்கே வன்முறை வெடித்ததால் போர்க்களமான பீகார்: போராடும் மாணவர்களுக்கு நீதி வேண்டும் என ராகுல் காந்தி ட்வீட்

பாட்னா: பீகார் மாநிலத்தில் ரயில்வே தேர்வு முறையை கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பல்வேறு பகுதிகள் போர்க்களம் போல காட்சியளிக்கின்றன. ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 15ம் தேதி வெளியாகின. தேர்வு முடிவுகள் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும் என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு 2ம் நிலை  தேர்வுகள் நடைபெறும் என்ற ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பீகார் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தேர்வு அறிவிக்கும் போது எதுவும் தெரிவிக்காமல் திடீரென இரண்டாம் நிலை தேர்வு நடைபெறும் என்பதை ஏற்க முடியாது என மாணவர்கள் தெரிவித்தனர்.

பாட்னா, நவடா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் போராட்டம் வெடித்துள்ளது. ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து மாணவர்கள், காவல்துறையினர் இடையே மோதல் வெடித்தது. தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், மாணவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதையடுத்து ரயில்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறியதால் பல்வேறு பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. 2ம் நிலை தேர்வு முழுக்க ஊழலுக்கே பயன்படும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தோடு ஒன்றிய அரசின் ரயில்வே வாரியம் விளையாடுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் ஒவ்வொரு இளைஞருக்கும் தனது உரிமைக்காக போராட உரிமை வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பீகாரில் போராடும் மாணவர்களுக்கு நீதி வேண்டும் என்றும், இதுவே குடியரசு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: