வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்தில் மொச்சை விளைச்சல் அமோகமாக நடந்துள்ளது. கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை, குமணன்தொழு, கோம்பைத்தொழு, தும்மக்குண்டு, காந்திகிராமம், வாலிப்பாறை, ஆளந்தளீர், நரியூத்து, சிங்கராஜபுரம், முருக்கோடை போன்ற பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மொச்சை சாகுபடி செய்தனர். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக வேளாண்மைதுறை, தோட்டக்கலை துறை சார்பாக விவசாய அறிமுகக் கூட்டம், விவசாய விழிப்புணர்வு கூட்டம் போன்றவை நடத்தினர். இதில் மருந்து தெளிப்பது பற்றியும், உரம் இடுவது பற்றியும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது மொச்சை அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மொச்சைக்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை விலை போய்க்கொண்டிருக்கிறது. இவற்றை மொத்த வியாபாரிகளும் சில்லரை வியாபாரிகளும் கம்பம், குமுளி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.இது குறித்து விவசாயிகளிடம் கேட்டதற்கு, விவசாய நிலங்களில் இடுகின்ற பயிர்களுக்கு அரசு அதிக அளவில் மானியங்கள் வழங்க வேண்டும். இதற்கு தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.