×

73வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே  73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார். தமிழக ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி முதல் முறையாக மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நாட்டுப்பண் இசைக்க தேசிய கொடியை ஏற்றினார். இதை தொடர்ந்து முப்படை ராணுவ வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, இன்று மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகளுடன் அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது.

இதேபோல், விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிபடுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் அலங்கார ஊர்தியில் இடம்பெறுகிறது. இதுபோக, தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் தத்ரூப உருவங்கள் அடங்கிய தத்ரூப சிலைகள் கொண்ட ஊர்தியும் இடம்பெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மொத்தமாக 3 அலங்கார ஊர்திகள் மட்டுமே அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மணி நேரம் நடைபெறும். ஆனால், கொரோனா பரவலால் இந்த ஆண்டு 30 நிமிடங்களில் விழாவை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், வேளாண்மை துறையின் சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது. குடியரசு தினவிழாவில் நீதிபதிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

Tags : 73rd Republic Day ,Chennai Marina ,Governor R. N. Ravi , Governor RN Ravi hoisted the national flag at the Chennai Marina on the occasion of the 73rd Republic Day ..!
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...