புதுடெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தியை அனுமதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதுடெல்லியில் இன்று நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.பாபு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாட்டின் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் நடக்கும் அணிவகுப்பில், முப்படைகளின் அணிவகுப்புடன், மாநிலங்களின் கலாச்சாரங்களை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கான வரைபடத்துடன் தமிழக அரசு விண்ணப்பித்த நிலையில், தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்  நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்தது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது  குறுக்கிட்ட நீதிபதிகள், அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரிய விண்ணப்பம்  மற்றும் நிராகரித்த உத்தரவு நகல் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, எழுத்துப்பூர்வமான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. முதல்வரும் இதை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளார் என தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அணிவகுப்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்தது, நிராகரித்தது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: