திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று பரிசோதனை குறைந்ததால் பாதிப்பு 26,514 ஆக இருந்தது. தொற்று 47 சதவீதத்தை தாண்டியது. கடந்த சில தினங்களாகவே திருவனந்தபுரம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. நேற்று மட்டும் 3256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கேரளாவில் மாவட்டங்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி திருவனந்தபுரம் மாவட்டம் மிக மோசமாக தொற்று பாதிக்கப்பட்ட ‘சி’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் ஒரு வாரத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள் மூடப்பட்டன. அரசியல், மத, கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. மத சடங்குகள் அனைத்தும் ஆன் லைன் மூலமாக நடத்த வேண்டும். திருமணம், இறுதி சடங்குகளுக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும்.
10, 12 வகுப்புகள், இளங்கலை, முதுகலை, இறுதியாண்டு வகுப்புகள் மட்டும் பள்ளி, கல்லூரிகளில் ேநரடியாக நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்து வகுப்புகளும் ஆன் லைன் மூலமே நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.