ஊட்டியில் உறைபனியால் கடுங்குளிர்-வெப்பநிலை ஒரு டிகிரிக்கு சென்றது

ஊட்டி :  நீலகிரியில் கடந்த சில தினங்களாக நீர் பனி காணப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் உறைபனி கொட்டியதால் ஊட்டியில் குளிர் அதிகரித்தது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் துவங்கி இரு மாதங்கள் நீர் பனி விழும். நவம்பர் இறுதி வாரம் முதல் பிப்ரவரி இறுதி வரையிலோ அல்லது மார்ச் முதல் வாரம் வரையிலோ உறைபனி விழும். ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கி தென்மேற்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை கொட்டி தீர்த்தது. இதனால், நீர் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

கடந்த மாதம் முதல் நீலகிரியில் உறைபனி விழத்துவங்கியது. இம்மாதம் துவக்கத்தில் சில தினங்கள் உறைபனி காணப்பட்டது. அதன்பின், உறைப்பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் முழுக்க மாவட்டத்தில் நீர் பனி கொட்டியது.இதனால், பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக துவங்கின. இந்நிலையில், நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உறைபனி விழுந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், சூட்டிங்மட்டம், கோத்தி போன்ற பகுதிகளில் உறைபனி கொட்டி கிடந்தது. இதனால், புல் மைதானங்கள் அனைத்தும் வெள்ளை கம்பளம் விரித்தார் போல் காட்சியளித்தது.

உறைப்பனி விழுந்த நிலையில், ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. இந்தாண்டு 1 டிகிரிக்கு ஊட்டி வெப்பநிலை சென்றது இது இரண்டாவது முறையாகும். நேற்று காலை பனிப்பொழிவால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் வெள்ளை நிற கம்பளம் போர்த்தியது போல் காட்டியளித்தது. சுற்றுலா பயணிகள் குளிரையும் பொருட்படுத்தாமல், அதனை கண்டு ரசித்தனர். பனிப் பொழிவு அதிகரித்துள்ள நிலையில், அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டுகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும், நிழல் தரும் இடங்களுக்கு சென்றால் குளிர் உள்ளது.

Related Stories: