வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. விவசாயிகள் தங்களது நிலங்களில் நெல் அறுவடை செய்ததை, ஆன்லைன் மூலம் நிலத்திற்கான ஆவணங்களை காட்டி, கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், வத்திராயிருப்பு வருவாய்த்துறை அலுவலகம் முன், விவசாயிகள் பிரகலாதன், முத்துராஜ் ஆகியோர் தங்களது நெல்லை அரசு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யவில்லை.
எங்களது நெல்லை கொள்முதல் செய்ய வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல் மூட்டைகளை சாலையில் போட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வருவாய்த்துறை அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், ‘டிஎஸ்பி சபரிநாதன், வருவாய் ஆய்வாளர் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர்கள் சுந்தராஜ், பாண்டியன், எஸ்ஐ பிரகஸ்பதி, விவசாயிகள் பிரகலாதன், முத்துராஜ் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், வருவாய்த்துறையினர், ‘அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய, விவசாயிகளுக்கு பட்டா இருந்தால்தான் அனுமதிக்கப்படும். பட்டா இல்லாவிடில் அனுமதிக்க முடியாது’ என்றனர். மேலும், பட்டா இல்லாத விவசாயிகளுக்கு பட்டா ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து, போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.