செய்யாறு அருகே பரபரப்பு வயல்வெளி வழியாக எடுத்து செல்லப்பட்ட மூதாட்டியின் சடலம்-நில உரிமையாளரிடம் போலீசார் பேச்சுவார்த்தை

செய்யாறு :  செய்யாறு அருகே வயல்வெளி வழியாக மூதாட்டியின் சடலம் எடுத்து செல்ல விவசாய நிலத்தின் உரிமையாளர் எதிர்த்ததால், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா மதுரை கிராம காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவரது  மனைவி முனியம்மாள்(63). இவர் உடல் நலக்குறைவால் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் மூதாட்டியின் சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல, சற்று தொலைவில் உள்ளதால், வழக்கமாகக் கொண்டு செல்ல குறுகிய வழியான விவசாய நிலத்தின் வழியாக கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது விவசாய நிலத்தின் உரிமையாளர் நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்ததால், நிலத்தில் சடலத்தை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி செந்தில், தாசில்தார் சுமதி, போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விவசாய நிலத்தின் உரிமையாளரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சடலத்தை கொண்டு செல்ல வழிவிடுமாறு கோரினர்.

இதையடுத்து அவர் அனுமதியளித்ததையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மூதாட்டியின் சடலம் நெற்பயிர் பயிரிடப்பட்ட வயல்வெளி வழியாக கொண்டு செல்லப்பட்டு சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: