கோவையில் அதிமுக பிரமுகர் ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; சுமார் 9 மணிநேர சோதனை நள்ளிரவில் நிறைவு

கோவை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியின் அதிமுக முன்னாள் தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 9 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட சோதனை நள்ளிரவில் நிறைவடைந்தது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள நம்பர் 4, வீரபாண்டி பேரூராட்சி, இதன் தலைவராக கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுகவை சேர்ந்த கே.வி.என்.ஜெயராமன் இருந்து வந்துள்ளார். இவர் தமது பதவி காலத்தில் வருமானத்தை விட அதிகமாக ரூ.1 கோடியே 45 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

சொத்து மற்றும் நகைகள் கே.வி.என். ஜெயராமனின் பெயரிலும், அவரது மனைவி கீர்த்தி பெயரிலும் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கே.வி.என்.ஜெயராமன் அவருடைய மனைவி கீர்த்தி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 5 பேர் திடீர் சோதனையிலும் ஈடுபட்டனர். சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனை நேற்று நள்ளிரவில் முடிவுக்கு வந்துள்ளது.       

Related Stories: